கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே மதுக்கால்குப்பம் கிராமத்தில் உள்ள ஓடையில் சிலர் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக ஆரம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒரு லாரி மற்றும் பொக்லைன் எந்திரம் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பொக்லைன் எந்திர டிரைவரான எளாவூரை சேர்ந்த தினகரன் (வயது 24), கிளீனர் புருஷோத்தமன்(30) மற்றும் பாபு (38) ஆகியோரை கைது செய்தனர்.
திருவள்ளூர் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த பட்டரைபெரும்புதுர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த ஆந்திர மாநில பதிவெண் கொண்ட லாரியை போலீசார் சோதனை செய்தனர். அதில் மணல் கடத்தியதாக நாகராஜகண்டிகையை சேர்ந்த டிரைவரான மணிகண்டன் (38), உடன் வந்த ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டையை சேர்ந்த திருமலை (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அதே போல திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் பெருமாள்பட்டு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட போது மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட ஒரு பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர். டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.