சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் ஆண்கள் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படிக்கும் பூந்தமல்லியை சேர்ந்த மாணவருக்கும், வில்லிவாக்கத்தை சேர்ந்த சக மாணவருக்கும் இடையே வகுப்பறையில் திடீரென தகராறு ஏற்பட்டது. இருவருக்கும் தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த மாணவர், மற்றொரு மாணவரை சிறிய கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மாணவர், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்திய கல்லூரி நிர்வாகம், இருவரையும் கண்டித்து அனுப்பியதாக தெரிகிறது. கத்திக்குத்தில் காயமடைந்த மாணவர், இதுபற்றி அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.