வால்பாறை
வால்பாறையில் 4 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் விதியை மீறி செயல்பட்ட கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
4 இடங்களில் சோதனை சாவடிகள்
வால்பாறை பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க தாசில்தார் ராஜா தலைமையில் வருவாய்த்துறை, சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் வெளியே செல்வதை தடுக்க இங்குள்ள ஸ்டேன்மோர் சாலை, நல்லகாத்து சாலை, புதுத்தோட்டம் சாலை, நடுமலை சாலை ஆகிய 4 இடங்களில் சோதனை சாவடிகளும் அமைத்து போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடைக்கு சீல்
அவசர தேவைகளுக்காக வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தேவை இல்லாமல் வெளியே வந்தவர்களை போலீசார் மற்றும் அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் இந்தப்பகுதியில் ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட கடையும் சீல் வைக்கப்பட்டது.
தொடர்ந்து தாசில்தார் அலுவலகத்தில் வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கொரோனா பரவலை தடுக்க அரசு அறிவித்து உள்ள விதிகளை கடைபிடித்து வியாபாரிகள் அனைவரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்லக்கூடாது. மீறி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும்வால்பாறை அரசு கல்லூரியில் 150 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது என்றனர்.