கரூர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை
ஏசு கிறிஸ்துவின் பிறப்பினை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு கரூரில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள புனித தெரசம்மாள் தேவாலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் நள்ளிரவு 12 மணி ஆனதும் ஏசு கிறிஸ்து பிறப்பை உணர்த்தும் வகையில் சொரூபத்தை பாதிரியார் செபாஸ்டின் துரை கையில் ஏந்தி தூக்கி காண்பித்தார். அப்போது அங்கிருந்த மக்கள், கைத்தட்டி ஏசுவின் துதிப்பாடல்களை பாடி வரவேற்றனர்.
சிறப்பு பிரார்த்தனை
பின்னர் தேவாலயத்தின் உள்ளே வைக்கோல் போரால் செய்யப்பட்டிருந்த குடிலில் சொரூபம் வைக்கப்பட்டது. அப்போது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை மக்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். பின்னர் நடந்த சிறப்பு பிரார்த்தனையில், மக்கள் அனைவரும் கல்வி, வேலை உள்ளிட்டவற்றில் மேன்மை பெற ஆண்டவன் அருள் புரிவார் என ஆசி வழங்கி பாதிரியார் பேசினார். இதில் கரூர், கோவை ரோடு, செங்குந்தபுரம், காந்திகிராமம், தாந்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கேக் வெட்டி கொண்டாட்டம்
இதேபோல், கரூர் சர்ச் கார்னரில் உள்ள சி.எஸ்.ஐ. ஹென்றி லிட்டில் நினைவாலயம் தேவாலயத்தில் பாதிரியார் பாஸ்கர், ஜோசப் தினகரன் ஆகியோர் தலைமையில் நேற்று அதிகாலை 4.30 முதல் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கரூரை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தேவாலயங்களின் முன்பு கேக் வெட்டி மகிழ்ந்தனர். மேலும் அந்த கேக்கை பிறருக்கு கொடுத்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளயம், முல்லைநகரில் உள்ள சுவிஷே திருச்சபை உலரட்சகர் ஆலயத்தில் நேற்று திருச்சபை போதகர் பிரவீன் சிறப்பு சொற்பொழிவு நடத்தினார். தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. இதேபோல் புகளூர் ஹைஸ்கூல்மேடுபெந்தேகோஸ் திருச்சபை, புகளூர் சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம், புனித அந்தோணியர் ஆலயம், காகிதபுரம் கிறிஸ்துவ ஆலயம், தளவாப்பாளையம் பிலிப்ஸ்கிறிஸ்துவ ஆலயம் உள்பட பல்வேறு ஆலயங்களில் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடந்தது.