திருச்சி, மார்ச். 12-
சென்னையை சேர்ந்தவர் தாமஸ் பாக்கியராஜ் வில்லியம். தொழிலதிபரான இவருக்கு திருச்சி - கல்லணை சாலை பாபா கோவில் எதிரே சுமார் 4 ஏக்கரில் பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் திருச்சி தில்லைநகர் பகுதியை சேர்ந்த ஜோசப் வல்லவராஜ் (வயது50) என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 5-ந்தேதி பண்ணைக்குள் புகுந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை மிரட்டி ரூ.1 கோடி கேட்டு காரில் கடத்தி திருச்சி முழுவதும் சுற்றினர். இந்தநிலையில் போலீசாரின் வாகனசோதனையில் அந்தகும்பல் லால்குடி அருகே சிக்கினர். இதையடுத்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில்ஆதிகுடியை சேர்ந்த ராஜா (27), லால்குடி பகுதியை சேர்ந்த கவின்குமார் (21), அருண்குமார் (30), சசிகுமார் (20), வடக்கு காட்டூர் பகுதியை சேர்ந்த சபரி (28) ஆகிய 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவ்வழக்கு சம்பந்தமாக லால்குடி பூவாளூர் ரோடு ராகவன் (26), ஆகாஷ் (22) ஆகிய 2 பேர் நேற்று திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்தனர். மாஜிஸ்திரேட் திரிவேணி, சரணடைந்த 2 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் துறையூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.