மாவட்ட செய்திகள்

பிரபல தாதா தட்டாஞ்சாவடி செந்திலுக்கு நிபந்தனை ஜாமீன்

புதுவை பிரபல தாதா தட்டாஞ்சாவடி செந்திலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

புதுச்சேரி,

புதுவை தட்டாஞ்சாவடியை சேர்ந்தவர் பிரபல தாதா செந்தில். மடுவுபேட் பகுதியை சேர்ந்த ரவுடி முரளி கொலை வழக்கில் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து தட்டாஞ்சாவடி செந்தில் தலைமறைவானார். அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். ஆனால் அவரை கைது செய்ய முடியவில்லை.

இதனால் தட்டாஞ்சாவடி செந்திலுக்கு சொந்தமான சுமார் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துகளை போலீசார் முடக்கினார்கள். இந்தநிலையில் மதுரையில் தங்கியிருந்த அவர் கைதுசெய்யப்பட்டார். பின்னர் புதுவை கொண்டுவரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் தட்டாஞ்சாவடி செந்தில் மீது நில அபகரிப்பு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. கைதான தட்டாஞ்சாவடி செந்தில் தரப்பில் ஜாமீன் கேட்டு புதுவை கோர்ட்டில் மனு செய்யப்பட்டது.

இந்த ஜாமீன் மனு புதுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அவர் தட்டாஞ்சாவடி செந்திலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

மறு உத்தரவு வரும்வரை ஏனாமில் தங்கியிருந்து ஏனாம் கோர்ட்டில் காலை, மாலை ஆகிய இரு தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT