சேலம்:
சேலம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கொரோனா பரிசோதனை மையம் செயல்பட தொடங்கியது. இதனை மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கொரோனா பரிசோதனை மையம்
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரசால் தினமும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை கட்டுப்படுத்த மாநகராட்சி மூலம் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாநகர பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று கண்டறியும் பரிசோதனையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் கொரோனா பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சேலம் அஸ்தம்பட்டி பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் சேலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு நேற்று முதல் செயல்பட தொடங்கியது. இதனை மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியே நடமாட வேண்டாம்
ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் நடமாட்டத்தை முழுமையாக தடுக்கும் வகையிலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மற்றும் சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கும் மாநகராட்சியுடன் இணைந்து தன்னார்வலர்கள் உணவுகள் வழங்கி வருகின்றனர்.
ஆய்வு முடிவில் ஆணையாளர் ரவிச்சந்திரன் கூறும் போது, பொதுமக்களின் வசதிக்காக மளிகை மற்றும் காய்கறிகள் நடமாடும் வாகனங்கள் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே காய்கறி வாங்குவதற்காக பொதுமக்கள் தேவையின்றி வெளியே நடமாட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.