திருச்சி,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் நேற்று தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு தே.மு.தி.க. தொழிற்சங்கத்தின் மாநில துணை தலைவர் முஜிபுர் ரகுமான் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் டி.வி.கணேஷ், கிருஷ்ண கோபால், குமார் ஆகியோர் பேசினர். அவை தலைவர் அலங்கராஜ், பொருளாளர் மில்டன் குமார், நிர்வாகிகள் பிரீத்தா, மகளிர் அணி பாக்கியம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் துப்பாக்கி சூடு நடத்தி பொதுமக்களின் உயிரை பறித்த போலீசார் மீது மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும், துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி அரசு பதவி விலக வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்.