மங்களமேடு,
ரேஷன் கடை
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே தேவையூரில் ரேஷன் கடை உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களாக அனைத்து பொருட்களும் வழங்கப்படுவது இல்லை எனவும், சில நேரங்களில் பொருட்கள் எடை குறைவாக இருப்பதாகவும், தரமற்ற அரிசி, கோதுமை வழங்கப்படுவதாகவும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று காலை ரேஷன் கடைக்கு வந்த பொதுமக்களிடம் கடை விற்பனையாளர் பொருட்கள் எதுவும் வரவில்லை என்று கூறியுள்ளார்.
சாலை மறியல்
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தேவையூரில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரேஷன் கடையில் சரியான எடையில் பொருட்கள் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதை அடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.