கோத்தகிரி
நீலகிரி மாவட்டம் மலைப்பிரதேசம் என்பதால் நிலச்சரிவு அபாயம் உள்ளது. எனவே ஆழ்துளை கிணறு அமைப்பது, பாறைகளுக்கு வெடி வைப்பது, பொக்லைன் எந்திரங்களை பயன்படுத்தி குழி தோண்டுவது ஆகியவற்றுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருக்கிறது. ஆனாலும் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தடையை மீறி பொக்லைன் எந்திரங்களை பயன்படுத்தி குழி தோண்டப்படுகிறது.
தற்போது விவசாய நிலத்தில் மேற்கொள்ளப்படும் உழவு பணிக்காக மினி பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து வருகிறது. ஆனால் உழவு பணிக்காக பயன்படுத்துவதாக அனுமதி பெற்றுவிட்டு, சிலர் கட்டிடங்கள் கட்டவும், தோட்டங்களில் சாலை அமைக்கவும் குழி தோண்டுவதற்கு மினி பொக்லைன் எந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கோத்தகிரி அருகே ஆடத்தொரையில் உள்ள ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில் சாலை அமைப்பதற்கு மினி பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி குழி தோண்டப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதன்பேரில் வருவாய் ஆய்வாளர் பூவேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் சத்யா, உதவியாளர் சரவணகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது உரிய அனுமதியின்றி மினி பொக்லைன் எந்திரம் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. உடனடியாக அதனையும், குழி தோண்டி எடுக்கப்பட்ட மண்ணை அப்புறப்படுத்த தயாராக வைத்திருந்த டிராக்டரையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்த அறிக்கை குன்னூர் சப்-கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.