சேலம்,
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மரவள்ளி கிழங்கு விலை நிர்ணயம் தொடர்பான முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். இதில் சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்ட விவசாயிகள், அரசு அலுவலர்கள், சேகோ மற்றும் ஸ்டார் உற்பத்தி ஆலை உரிமையாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
சேலம் மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு அதிகளவு பயிரிடப்பட்டு வருகிறது. ஆனால் அவற்றுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. கடந்த ஆண்டு ஒரு மூட்டை ரூ.700 வரை விற்ற மரவள்ளி கிழங்கு இந்த ஆண்டு ரூ.250-க்கு தான் விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடனாளிகளாக தள்ளப்படுகிறார்கள். ஜவ்வரிசியில் மக்காச்சோளம் மாவு, ரசாயனம் போன்றவை அதிகமாக கலப்படம் செய்யப்படுவதால் கிழங்கின் விற்பனை குறைந்துள்ளது. இது தடுக்கப்பட வேண்டும்.
நெல், கரும்பு, மஞ்சளை போன்று மரவள்ளி கிழங்குக்கும் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மரவள்ளி கிழங்கு 28 பாயிண்டுக்கு மேல் இருந்தாலும் ஆலை அதிபர்கள் அதை வாங்க மறுக்கின்றனர். சத்துணவு, அங்கன்வாடி மையத்தில் மரவள்ளி கிழங்கை சேர்க்க வேண்டும்.
கூட்டத்தில் சேகோ ஆலை உரிமையாளர்கள் கூறும் போது, மரவள்ளி கிழங்கிற்கு விலை நிர்ணயம் செய்வது எங்கள் கையில் மட்டும் இல்லை. மார்க்கெட்டில் ஜவ்வரிசியின் இருப்பு மற்றும் தேவை அடிப்படையில் மரவள்ளி கிழங்குக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் விவசாயிகள் எங்களை மட்டும் குறை சொல்லி பேசுகின்றனர்.
ஒருசில ஆலையில் செய்யப்படும் கலப்படம் குறித்து நாங்களே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து வருகிறோம். மரவள்ளி கிழங்கு விலை நிர்ணயத்துக்கு நாங்கள் கட்டுப்பட தயாராக இருக்கிறோம் என்றனர். கூட்டத்தில் இடையிடையே விவசாயிகளுக்கும், சேகோ ஆலை உரிமையாளருக்கும் இடையே காரசாரமாக விவாதம் நடந்தது.
மரவள்ளி கிழங்குக்கு நியாயமான விலை கிடைக்கவே இந்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அனைவருடைய பிரச்சினைகளையும் கேட்டறிந்து அதற்கு எவ்வாறு தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு முதல் அக்டோபர் மாதத்தில் முத்தரப்பு கூட்டம் நடைபெறும். சேகோ ஆலை அமைப்பில் இணை உறுப்பினர்களாக விவசாயிகள் சேர்க்கப்படுவார்கள்.
ஜவ்வரிசியில் கலப்படம் செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் தாலுகா வாரியாக கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு கலப்படத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த குழுவில் விவசாயி ஒருவர் இடம்பெறுவார். சேகோ ஆலையில் கண்காணிப்பு கேமரா பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெல் கொள்முதல் நிலையம் போன்று மரவள்ளி கிழங்குக்கும் கொள்முதல் நிலையம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். மேலும் அங்கன்வாடி மற்றும் சத்துணவில் மரவள்ளி கிழங்கை சேர்ப்பது என்றால் 100 சதவீதம் தரமானதாக இருக்க வேண்டும். விவசாயிகளுக்கு மரவள்ளி கிழங்குக்கு நல்ல விலை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.