தேவாரம்:
தேவாரம் பேரூராட்சி மன்ற முதல் கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதற்கு தலைவர் லட்சுமி பால்பாண்டியன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் குலோத்துங்கன், துணைத்தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க. ஆகிய கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள், தேவாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முக்கிய தீர்மானங்களை தலைவர் வாசித்தார். அதில் தேவாரம் அருகே உள்ள அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க கூடாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதற்கு முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் நியூட்ரினோ திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்துவதாக கூறினார். இதற்கு அனைத்து கவுன்சிலர்களும் ஒருமனதாக தீர்மானத்தை ஒப்புதல் அளிப்பதாக கூறினர்.
பின்னர் கூட்டத்தில், 1-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஆசை பேசுகையில், வார்டில் பெண்கள் சுகாதார வளாகங்களில் அடிக்கடி மின்மோட்டார் பழுதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது என்றார். அதற்கு தலைவர், தட்டுப்பாடு இன்றி தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 12-வது வார்டு, தி.மு.க. கவுன்சிலர் சுமதி பேசுகையில், தனது வார்டு பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் நிலை உள்ளது. இதனை தடுக்க வேண்டும் என்றார். அதற்கு செயல் அலுவலர், உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்படும் என்றார். அதன் பின்னர் கூட்டம் முடிவடைந்தது.