மாவட்ட செய்திகள்

இயற்கை எரிவாயு எடுக்கவுள்ள இடத்தில் ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் காரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்கவுள்ள இடத்தில் ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் காரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வடகாடு,

இயற்கை எரிவாயு திட்டம்

வடகாடு அருகே உள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்க கடந்த 15-ந் தேதி மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து நெடுவாசல் பகுதி விவசாயிகள், தங்கள் பகுதியில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயம் அழிந்துவிடும் என்று கூறி அந்த திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நெடுவாசல் பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தால் (ஓ.என்.ஜி.சி.) கையகப்படுத்தப்பட்ட நிலத்தை ஆய்வு செய்ய அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் 2 கார்களில் நேற்று மாலை வந்தனர்.

அதிகாரிகள் கார் முற்றுகை

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு திரண்டு வந்த பொதுமக்கள், அதிகாரிகள் வந்த ஒரு காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்து உடனடியாக வெளியேறும்படி அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பொதுமக்கள் முற்றுகையிட்ட காரை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு மற்றொரு காரில் அதிகாரிகள் அனைவரும் அங்கிருந்து சென்று விட்டனர். பின்னர் மீண்டும் அதிகாரிகள் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அந்த காரை ஓட்டி சென்றனர்.