கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை டூரிஸ்ட் மேக்ஸிகேப் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் நலச்சங்கத்தின் சார்பில் கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி நேற்று மத்திய, மாநில அரசுகளுக்கு செல்போன் மூலம் குறுந்தகவல்களை அனுப்பும் போராட்டம் நடந்தது.
சங்க மாவட்ட செயல் தலைவர் ஜெயசீலன், கவுரவத்தலைவர் செந்தில்குமார், செயலாளர் டேவிட் ஆரோக்கியராஜ், பொருளாளர் ஹரி பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
அப்போது, ஊரடங்கு காலத்தில் வாகனங்கள் ஓடாத நிலையில் சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். வாகன கடன்களுக்கு அபராத வட்டியை கேட்டு நெருக்கடி கொடுப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டுனர்களுக்காக தனி நல வாரியம் அமைக்க வேண்டும்.
நலவாரியத்தில் இல்லாத அனைத்து ஓட்டுனர்களுக்கும் வாழ்வாதார இழப்பீடு வழங்க வேண்டும். அனைத்து வாகன உரிமையாளருக்கும் மானியத்துடன் அரசு வங்கிக்கடன் வழங்க வேண்டும். இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் பேரிடர் இழப்பீடு வழங்க வேண்டும்.