தேவகோட்டை,
தேவகோட்டை அருகே கற்படை அய்யனார் வயல் கிராமத்தில் சிலை உடைய அய்யனார் கோவில் உள்ளது. பல்வேறு கிராம மக்களுக்கு குல தெய்வமாக இந்த கோவில் இருந்து வருகிறது. தற்போது மார்கழி மாதம் என்பதால் அதிகாலை பூஜை மற்றும் மாலை பூஜை நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் வழக்கம் போல் பூஜைகளை சிவாச்சாரியார்கள் நடத்தினார்கள். அதன் பிறகு கோவில் கதவை அடைத்து விட்டு சென்றனர். நேற்று காலை கோவிலை திறந்தபோது நாணயங்கள் சிதறிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியல்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் கொள்ளை போனது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசிலும் புகார் செய்யப்பட்டது. தேவகோட்டை துணை சூப்பிரண்டு ரமேஷ், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். கோவில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா சேதப்படுத்தப்பட்டு இருந்தது. இருப்பினும் அதில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து வேலாயுதபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிலில் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்த கும்பலை தீவிரமாக தேடிவருகின்றனர்.