மாவட்ட செய்திகள்

காற்றுக்காக கதவை திறந்து வைத்துவிட்டு தூக்கம்: கீரனூர் பேரூராட்சி ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

கீரனூரில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கியதால் பேரூராட்சி ஊழியர் வீட்டில் நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கீரனூர்

நகை-பணம் திருட்டு

கீரனூர் மேல காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் அழகர் (வயது 43). இவர், கீரனூர் பேரூராட்சியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அழகர் காற்றுக்காக வீட்டுக் கதவைத் திறந்து வைத்து விட்டு வராண்டாவில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், சாவியை எடுத்து பீரோவில் இருந்த 4 பவுன் தங்கம் மோதிரம், வெள்ளி கொலுசு மற்றும் ரூ. 40 ஆயிரம் ஆகியவற்றை திருடிசென்று உள்ளனர். மேலும் அவர் வைத்திருந்த செல்போனையும் எடுத்து சென்றுவிட்டனர். இதுகுறித்து கீரனூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

2 பேர் கைது

அறந்தாங்கி போலீசார் நேற்று கட்டுமாவடி சாலை ரெயில்வே கேட் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது எல்.என்.புரத்தை சேர்ந்த ராஜவீரன் (30), பூபதிநாதன் (23) ஆகிய இருவரையும் போலீசார் சோதனை செய்தபோது, அவர்கள் கஞ்சா வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மறைத்து வைத்து இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து ராஜவீரன், பூபதிநாதன் ஆகிய இருவரையும் அறந்தாங்கி போலீசார் கைது செய்தனர்.