மாவட்ட செய்திகள்

நெல்லையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

நெல்லையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

நெல்லை,

நெல்லையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் மற்றும் வாரிசுதாரர் நல அமைப்பு சார்பில் நெல்லை வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் அலுவலகம் முன்பு நேற்று தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

சங்க பொதுச் செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் காளத்திநாதன், துணை தலைவர் எஸ். முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் மோகன் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

மாதந்தோறும் 1ந்தேதி அன்றே முழுமையாக ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

அரசு அனைத்து துறை ஓய்வூதிய கூட்டமைப்பு தலைவர் சண்முகசுந்தரம், போக்குவரத்து சி.ஐ.டி.யூ. பொதுச் செயலாளர் ஜோதி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதில் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.