மாவட்ட செய்திகள்

டிராக்டர் டிப்பர் திருடியவர் கைது

வேப்பூர் அருகே டிராக்டர் டிப்பர் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

வேப்பூர்,

வேப்பூர் அருகே உள்ள சிறுகரம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணமூர்த்தி. இவர் சம்பவத்தன்று இரவு தனது டிராக்டரில் உள்ள டிப்பரை மட்டும் வயலில் நிறுத்தி விட்டு டிராக்டரை வீட்டிற்கு ஓட்டி வந்தார். மறுநாள் அதிகாலை வயலுக்கு சென்று பார்த்தபோது அங்கே நிறுத்தி வைத்திருந்த டிப்பரை காணவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இரவு நேரத்தில் யாரோ மர்ம நபர் அந்த டிராக்டரை திருடி சென்றுவிட்டார்.

இது குறித்து முத்து கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து டிப்பரை திருடிச்சென்ற மர்மநபரை தேடி வந்தனர். இந்த நிலையில் சிறுபாக்கம் அடுத்த அடரி பகுதியில் டிப்பர் நின்றதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த அழகேசன் மகன் வேல்முருகன்(வயது 46) என்பவர் டிப்பரை திருடி வந்தது தெரியவந்தது. இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்து அவரிடம் இருந்த டிப்பரையும் பறிமுதல் செய்தனர்.