திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கம் சாவடி தெருவை சேர்ந்தவர் சங்கர்(வயது 22), என்ஜினீயரிங் கல்லூரி மாணவர். இவருடைய மனைவி கவுசல்யா(19). இருவரும் காதலித்து கலப்பு திருமணம் செய்துகொண்டனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13ந் தேதி உடுமலையில் சங்கரையும், கவுசல்யாவையும் ஒரு கும்பல் அரிவாளால் கொடூரமாக வெட்டியது. இதில் சங்கர் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த கவுசல்யா சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார்.
இந்த சம்பவம் தொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுசல்யாவின் பெற்றோர், தாய்மாமா உள்பட 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். திருப்பூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் இந்த கொலை வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரும் திருப்பூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், சாட்சிகள் 4 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்தினார்கள். பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 18ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.