மாவட்ட செய்திகள்

பாளையங்கோட்டையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்டு பல்வேறு அமைப்பினர் போராட்டம்

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி பாளையங்கோட்டையில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி பாளையங்கோட்டையில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞர்கள், காளைகள் வேடம் அணிந்து கலந்து கொண்டனர்.

பொங்கல் திருநாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. இதனால் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை.

எனவே வழக்கம்போல் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கவேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் தென்மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தமிழ் பண்பாட்டு மையத்தினர், இனப்படுகொலைக்கு எதிரான கூட்டமைப்பினர், தமிழர் தேசிய முன்னணியினர், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர், செங்கொடி எழுச்சி இயக்கத்தினர் மற்றும் அ.தி.மு.க., தி.மு.க., நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த அனுமதிக்க வேண்டும். தமிழக காளைகளை காப்பாற்ற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். ஜல்லிக்கட்டு குறித்து கல்லூரி மாணவர்கள் நாடகம் நடித்து காட்டினர்.

போராட்டத்துக்கு ஜல்லிக்கட்டு காளைகளுடன் இளைஞர்கள் வந்தனர். காளைகள் போன்று இளைஞர்கள் வேடம் அணிந்து வந்து இருந்தனர். போராட்டத்தில் முன்னாள் மேயர் புவனேசுவரி, தச்சை கணேசராஜா, தி.மு.க. மாவட்ட செயலாளர் அப்துல்வகாப், அய்யா வழி சிவச்சந்திரன், பாதிரியார் மை.பா.ஜேசுராஜ், ரமேஷ்ராஜா, கவிஞர் கிருஷி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பெரும்பரப்பு ஏற்பட்டது.