செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள விழிப்பணங்குறிச்சி கிராமத்தில் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக இருந்த ஒருவர் நேற்று முன்தினம் தெப்பத்திருவிழா நடத்த முடிவு செய்தார். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் வெளிநாட்டில் இறந்ததை தொடர்ந்து, அவரது உடல் சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து ஊரில் சிவன் கோவில் எதிரே உள்ள சுடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டு, மறுநாள் ஏரியில் அஸ்தியைக் கரைக்க திட்டமிட்டிருந்தனர்.
இந்த நிலையில் சிவன் கோவில் பூசாரி, அதே நாளில் அதே ஏரியில் தெப்பத்திருவிழா நடத்த திட்டமிட்டிருந்தார். இதனையறிந்த கிராம மக்கள் ஒரே ஏரியில் அஸ்தி கரைக்கப்படும் அதே நாளில் தெப்பத்திருவிழா நடத்துவது நல்லதல்ல என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பூசாரி, கோவிலில் பணி செய்ய விரும்பவில்லை என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து வேறு பூசாரி வைத்து கோவிலை பராமரிக்க கிராம மக்கள் திட்டமிட்டுள்ளனர்.