மாவட்ட செய்திகள்

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

ராஜபாளையத்தில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக செல்வதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜபாளையம்,

ராஜபாளையத்தில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக செல்வதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குழாய்கள் சேதம்

ராஜபாளையம் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து வரக்கூடிய மழை நீரானது தேக்கி வைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு நகர் பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் பணிகள் நகரில் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. ஆதலால் இப்பகுதியை கனரக வாகனங்கள் கடந்து செல்லு போது பள்ளங்கள் ஏற்பட்டு அப்பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்கள் சேதம் அடைந்து வருகிறது.

வீணாகும் குடிநீர்

இதனால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக செல்கிறது.

ராஜபாளையம் ஆர்.ஆர்.நகர் பகுதியில் நேற்று காலை குடிநீர் குழாய் சேதமடைந்து தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. இதேபோல் பி.எஸ்.சி.ஆர். சாலை, சங்கரன்கோவில் முக்கு, ஜவகர் மைதானம், காந்தி கலைமன்றம் ஆகிய பகுதிகளிலும் அடிக்கடி தண்ணீர் குழாய் சேதமடைந்து வருகிறது. இதனால் குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது.

10 நாட்கள்

இதுகுறித்து ஆர்.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

ஆர்.ஆர். நகர் உள்பட ராஜபாளையத்தில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாக செல்கிறது.

இதனால் இப்பகுதி மக்களுக்கு வாரம் ஒரு முறை 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வரும் நிலை ஏற்பட்டதுடன், தண்ணீரை விலைக்கு வாங்கக்கூடிய அளவிற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நடவடிக்கை

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த குழாய்களை சரி செய்வதுடன், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்போது தான் குடிநீர் தட்டுப்பாட்டில் இருந்து மக்கள் விடுபட முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.