மேட்டூர்,
மேட்டூர் அணை தூர்வாரும் பணியை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முதல்-அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் அ.தி.மு.க. (அம்மா) அணி நிர்வாகிகள் சார்பில் வழிநெடுகிலும் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன.
மேலும் கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன. மேட்டூரின் எல்லைப்பகுதியில் ஆங்காங்கே செண்டை மேளம் முழங்க அ.தி.மு.க. (அம்மா) அணி நிர்வாகிகள் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பூரண கும்ப மரியாதை
முன்னதாக மேட்டூர் அனல்மின்நிலைய 4 ரோடு அருகே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. (அம்மா) அணி சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து அவரை வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் மேட்டூர் நகர கூட்டுறவு வங்கி தலைவர் சந்திரசேகரன், முன்னாள் நகர்மன்ற தலைவர்கள் லலிதா சரவணன், கந்தசாமி, அ.தி.மு.க.(அம்மா) அணி மாவட்ட அவைத்தலைவர் குருசாமி, மேட்டூர் நகர மாணவரணி இணை செயலாளர் சரவணன், கொளத்தூர் ஒன்றிய செயலாளர் மனோகரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சாந்தா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சாவித்ரி, முன்னாள் ஒன்றிய செயலாளர் சின்னராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.