அடையாறு,
சென்னை வடபழனியை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், நேற்று முன்தினம் இரவு பெசன்ட் நகரில் உள்ள காபி ஷாப் ஒன்றில் தனது பிறந்த நாளை நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார்.
அப்போது அங்கு காரில் குடிபோதையில் வந்த 3 வாலிபர்கள், அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசி கிண்டல் செய்ததாகவும், இதை தட்டிக்கேட்ட அந்த பெண்ணின் நண்பர்களை தரக்குறைவாக பேசி தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் சாஸ்திரி நகர் போலீசார், இளம்பெண்ணை கிண்டல் செய்ததாக காரில் வந்த 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், பெசன்ட் நகரில் வசித்து வரும் ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஐ.ஜி முரளி என்பவரது மகன் ரோஹித்(வயது 27) மற்றும் அவருடைய நண்பர்களான வினோத்(25), ராஜா(24) என்பதும் தெரியவந்தது.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வினோத்தை கைது செய்தனர். மற்ற 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.