மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மோட்டார்சைக்கிள் திருட்டு
மயிலாடுதுறை திருவிழந்தூர் தோப்பு தெருவை சேர்ந்தவர் நடராஜன் மகன் சீனிவாசன் (வயது 31). இவர் கடந்த 20-ந்தேதி மோட்டார் சைக்கிளை தனது வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதேபோல மயிலாடுதுறை சேர்ந்தங்குடி மெயின் ரோட்டை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் கதிரேசன் (28) என்பவர் கடந்த 19-ந்தேதி தனது வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து கதிரேசன் போலீசில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
வாலிபர் கைது
விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடி சென்றவர் தஞ்சை விளார் சாலையை சேர்ந்த குருசாமி மகன் ராஜபாண்டி (29), என்பதும், இவர் மயிலாடுதுறை சித்தர்காடு பனந்தோப்பு தெருவில் வசித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ராஜபாண்டியை கைது செய்த மயிலாடுதுறை போலீசார் அவரிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.