செய்திகள்

திருச்சிற்றம்பலம் பகுதியில் சாலை ஓரங்களில் குவிக்கப்படும் தென்னை மரங்கள்

கஜா புயலின் போது சாய்ந்த தென்னை மரங்கள் திருச்சிற்றம்பலம் பகுதியில் சாலை ஓரங்களில் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இந்த தென்னை மரங்களை வியாபாரிகள் செங்கல் சூளைகளுக்குகூட வாங்கி செல்லவில்லை.

திருச்சிற்றம்பலம்,

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலின் கோர தாண்டவத்தால் தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மதுக்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான தென்னை மரங்கள் சாய்ந்தன. இதனால் இப்பகுதியில் உள்ள தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் முழுமையாக சீர்குலைந்துள்ளது. ஆங்காங்கே ஒரு சில பகுதிகளில் உள்ள விவசாயிகள் மட்டும் தற்போது தென்னந்தோப்புகளை மறு சீரமைப்பு செய்து தென்னங்கன்றுகளை நடவு செய்து வருகின்றனர். பெரும்பாலான பகுதிகளில் புயலில் விழுந்த தென்னை மரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை.

செங்கல் சூளைகள்

இந்நிலையில், திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள பல தென்னை விவசாயிகள் தங்களது தோப்புகளில் இருந்து அகற்றப்படும் தென்னை மரங்களை சாலை ஓரங்களில் உள்ள இடங்களில் குவியல் குவியலாக குவித்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் தென்னை மரங்கள் தீயிட்டு எரிக்கப்படுவதால் வாகனங்களில் செல்லும் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். தங்களது தென்னந்தோப்பில் விழுந்து கிடக்கும் மரங்களை இலவசமாக செங்கல் சூளைக்கு கூட அனுப்பமுடியாத அவல நிலையில் தென்னை விவசாயிகள் உள்ளனர். சாய்ந்து கிடக்கும் தென்னை மரங்கள் செங்கல் சூளைகளுக்கு கூட வாங்கப்படாததால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.