சென்னை,
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பேட்டி கொடுத்தபோது, கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்டு பெரும் சர்ச்சையில் சிக்கினார்.
சூப்பிரண்டு பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட் டது. இந்தநிலையில், போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுத்து அரசு நேற்று உத்தரவிட்டது. பாண்டியராஜன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
அவருக்கு பதிலாக கோவை மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சுஜித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கோவை நகரில் போக்குவரத்து பிரிவு துணை கமிஷனராக பணியாற்றினார். பொள்ளாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராமும் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, நீலகிரி மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் பணியாற்றிய சிவகுமார் பொள்ளாச்சி துணை சூப்பிரண்டாக புதிதாக பொறுப்பு ஏற்பார் என்று அரசு அறிவித்துள்ளது.
மேலும் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நடேசனும் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கோவை மாவட்ட நக்சல் பிரிவு சிறப்பு இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.