பனாஜி,
கோவா விமான நிலையத்தில் பா.ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
கோவா மாநில விமான நிலையத்தில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அமித் ஷாவை வரவேற்க பா.ஜனதா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. பலத்த பாதுகாப்பிற்கு இடையே பொதுக்கூட்டம் நடைபெற்றது. அமித் ஷா வருவதற்கு முன்னதாக விமான நிலையத்தில் சிறப்பு ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளது. கட்சி கூட்டத்தை விமான நிலையத்தில் நடத்தப்பட்டதற்கு விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
அரசியல் கட்சியின் பொதுக்கூட்டம் விமான நிலையத்தில் நடைபெற்றது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகும் என காங்கிரஸ் குற்றம் சாட்டிஉள்ளது.
விமான நிலையத்தில் நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர், கட்சியின் தலைவர் அமித் ஷா மற்றும் பிற எம்.எல்.ஏ.க்கள் கலந்துக் கொண்டனர். காவி கட்சியானது நல்லாட்சிக்கான அனைத்தையும் இழந்துவிட்டது என காங்கிரஸ் விமர்சனம் செய்து உள்ளது. முன் எப்போதும் இல்லாத மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
பொதுக்கூட்டத்தில் பாரதீய ஜனதா சட்டவிரோதமாக விமான நிலையத்தை பயன்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்து உள்ள காங்கிரஸ் கட்சியின் செயலாளர் கிரிஷ் சோதாங்கர், விமான நிலையத்தில் சட்டவிரோதமாக கூட்டம் நடத்திய விவகாரம் தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள், அமித்ஷா மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தண்டிக்கப்படவேண்டும் என கூறிஉள்ளார்.