செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை: அரசின் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் - பொதுமக்களுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்

கொரோனா வைரசை தடுக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிக்கு தமிழக மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை,

கொரோனா வைரஸ் தொற்று நோய் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால் அதில் இருந்து தமிழக மக்களையும் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும். குறிப்பாக, தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகள் பயனுள்ள முயற்சியாகும்.

எனவே, தமிழக மக்கள் அனைவரும் அரசு மேற்கொள்ளும் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மேலும், உடலை சுத்தமாக வைத்துக்கொண்டு, சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்வதோடு பொது இடங்களிலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஆளும் ஆட்சியாளர்கள் மட்டுமல்ல அனைத்து அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும், தனியாரும் அவரவர் பங்களிப்பை சிறப்பாக மேற்கொண்டு அனைத்து தரப்பு மக்களின் உடல் நலன் காக்க உதவிக்கரமாக இருக்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.