திருச்சி,
சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி அறிவித்து ஆணை வழங்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் திருச்சி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டத்துக்கு திருச்சி மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் சந்திரசேகரன் (தஞ்சாவூர்), மகாலிங்கம் (திருவாரூர்), கணேசன் (நாகை), கருப்பையா (புதுக்கோட்டை) முன்னிலைவகித்தனர்.
தண்டோரா போட்டு ஆர்ப்பாட்டம்
சாலை பணியாளர்களுக்கு நிரந்தர ஊதிய தொகுப்பில் இருந்து ஊதியம் வழங்கவேண்டும். சாலைப்பணியாளர்களுக்கு தொழில் நுட்ப கல்வித்திறன் பெறா ஊழியர்களுக்கான ஊதியம் வழங்கவேண்டும். பணி நீக்கத்தால் இறந்த சாலைப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு விதிமுறைகளை தளர்த்தி பணி வழங்கவேண்டும். சாலை பராமரிப்பு பணியினை தனியார் பராமரிக்க வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின்போது சில பணியாளர்கள் தண்டோரா போட்டு கோரிக்கைகளை கோஷமாக தொடர்ந்து முழங்கினார்கள். அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் பெரியசாமி, துணை தலைவர் கோதண்டபாணி, மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்பட கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.