நச்சலூர்,
கரூர் மாவட்டம், நெய்தலூர் ஊராட்சி நெய்தலூர்காலனியில் உள்ள 3-வது தெருவில்(தெற்குவீதி)சுமார் 15-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களில் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மின்கம்பங்களில் உள்ள தெருவிளக்குகள் பல மாதங்களாக பழுதடைந்து எரியாமல் தெருக்கள் முழுவதும் இருட்டாக உள்ளது.
மேலும் தினமும் வேலைக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் இந்த தெரு வழியாக செல்வோர் இருட்டில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்படுகின்றது. மேலும் இப்பகுதி இருட்டாக இருப்பதால் பாம்புகள் மற்றும் பூச்சிகள் அருகில் உள்ள வீட்டிற்குள் புகுந்து விடுகின்றன. இதனால் அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர்.
தேர்தலை புறக்கணிக்க முடிவு
இது குறித்து பல முறை ஊராட்சி செயலாளரிடம் கூறியும் இது வரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அதனால் ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் அடிப்படை தேவையான தெருவிளக்கை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால், இப்பகுதி பொதுமக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்யபோவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.