புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி தொடங்கியது. மறுநாள் (பிப்ரவரி-1) மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து விவாதம் நடந்து வந்தது. விவாதத்துக்கு பதில் அளித்து நிர்மலா சீதாராமன் கடந்த 11-ந் தேதி பேசினார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு முடிவுக்கு வந்தது.
அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. இன்று இரண்டாவது அமர்வுக்காக நாடாளுமன்றம் கூடுகிறது. இந்த அமர்வில், டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஏற்பட்ட கலவரங்களில் 45-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புயல் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி வன்முறை குறித்து மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க கோரி காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளன. வட கிழக்கு டெல்லி வன்முறை குறித்து மாநிலங்களவை விவாதிக்க எம்பி திருச்சி சிவா ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.
இதேபோல், டெல்லி வன்முறை தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்க ஆம் ஆத்மி, இந்திய கம்யூ.,மார்க்சிஸ்ட் கம்யூ. உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி வன்முறை தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்னால் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
அதுபோல் டெல்லியில் வன்முறை தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்யக் கோரி ராகுல் காந்தி, சஷி தரூர், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களவை இன்று தொடங்கியதும் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி காலமான பீகாரின் வால்மீகி நகரைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தள எம்.பி., பைத்யநாத் பிரசாத் மகாதோவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கபட்டது பின்னர் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
டெல்லி வன்முறைகள் தொடர்பாக விவாதிக்க மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன இதை தொடர்ந்து மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.