பெங்களூரு,
கர்நாடகத்தில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இடைத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை தினேஷ் குண்டுராவும், எதிர்க்கட்சி மற்றும் சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிகளை சித்தராமையாவும் ராஜினாமா செய்தார்கள்.
அவர்களது ராஜினாமாவை காங்கிரஸ் மேலிடம் அங்கீகரிக்கவும் இல்லை, நிராகரிக்கவும் இல்லை. ஆனாலும் மாநில தலைவர், எதிர்க்கட்சி தலைவர் பதவிகளுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.
ஆனால் டெல்லி சட்டசபை தேர்தல், மாநில தலைவர் பதவிக்கு மூத்த தலைவர்கள் இடையே போட்டி, கருத்து வேறுபாடுகள் ஆகிய காரணங்களால் மாநில தலைவரை நியமிக்காமல் காங்கிரஸ் மேலிடம் காலம் தாழ்த்தி வந்தது. இதனால் 2 மாதத்திற்கும் மேலாக கர்நாடக மாநில காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. இதனால் மாநில தலைவரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்தை தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக அக்கட்சியின் மூத்த தலைவர் டி.கே. சிவக்குமார் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து டி.கே. சிவக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில், நாங்கள் அனைவரும் ஒரே குழுவாக செயல்படுவோம். நான் மட்டுமே தனியாக முடிவுகளை எடுக்க மாட்டேன். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்று தெரிவித்தார்.
டி. கே. சிவக்குமாருக்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில், டி.கே. சிவக்குமாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். புதிய தலைவரை நியமித்ததற்காக சோனியா காந்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தில் காங்கிரசை டி.கே. சிவக்குமார் வலுப்படுத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
இதேபோன்று ஈஷ்வர் காண்ட்ரே, சதிஷ் ஜர்கிஹோலி மற்றும் சலீம் அகமது ஆகியோர் கர்நாடக மாநில காங்கிரசின் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.