துறையூர்,
திருச்சி மாவட்டம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள பெரியார்நகர், சாமிநாதன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருக்கும். இந்த நிலையில் இப்பகுதிகளில் உள்ள சில வீடுகளில் மர்ம குறியீடு செய்யப்பட்டுள்ளது.
அதாவது, பூட்டி கிடக்கும் வீடுகள், அடிக்கடி வெளியூர்களுக்கு செல்லும் நபர்கள், ஒருவர் அல்லது இருவர் மட்டுமே இருக்கும் வீடுகளில் இந்த குறியீடு காணப்பட்டது.
கொள்ளை கும்பல் யாராவது இந்த குறியீட்டை வைத்துள்ளார்களா? என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பெரியார் நகரை சேர்ந்த வக்கீல் ரபிக் என்பவர் வீட்டிலும் இந்த குறியீடு காணப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ரோந்து பணி
இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், வீடுகளில் குறியீடு செய்தவர்களை பிடிக்க போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். இந்த பகுதி புறவழிச்சாலையில் அமைந்துள்ளதால், வீடுகளில் கொள்ளையடிக்கும் நபர்கள் எளிதில் தப்பி சென்று விடுகிறார்கள். இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு நிற்கிறார்கள். இது போன்ற நபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்த வேண்டும். குறியீடு செய்யப்பட்ட வீடுகளை போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றனர்.