காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி அணையின் கீழ் பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் இருமத்தூர் வரை 17 இடங்களில் பெரிய அளவிலான ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மின் மோட்டார் அமைக்கப்பட்டு தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதன் மூலம் பர்கூர், சந்தூர், போச்சம்பள்ளி, மேல்பதி கூட்டுகுடிநீர் திட்டம் உள்பட 17 குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதில், தமிழ்நாடு வடிகால் வாரியத்தின் மூலம் ஒப்பந்தம் விடப்பட்டு, ஒப்பந்ததாரர்கள் மூலம் தினக்கூலியாக பராமரிப்பு பணியாளர்கள், மின் பணியாளர்கள் மற்றும் பொருத்துனர்கள் என 80 பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு முறையே ரூ.6, 7, 8 ஆயிரம் மாதச்சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊதிய உயர்வு கேட்டு ஒப்பந்த ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழக அரசு ரூ.2 ஆயிரத்து 500 உயர்த்தி வழங்க உத்தரவிட்டது. தற்போது வரை உயர்த்தப்பட்ட தொகை வழங்கப்பட வில்லை எனவும், கடந்த 3 மாதங்களாக மாத ஊதியம் வழங்காமல் ஒப்பந்ததாரர்களும், அதிகாரிகளும் காலதாமதம் செய்து வருவதை கண்டிப்பதாகவும் கூறி நேற்று போராட்டம் நடந்தது.
அதையொட்டி காவேரிப்பட்டணம் அருகே தளிஅள்ளி தலைமை நீரேற்று நிலையம் எதிரே 80 ஒப்பந்த ஊழியர்களும் உள்ளிருப்பு மற்றும் அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்கள் எழுப்பினார்கள்.