பெங்களூரு,
பெங்களூரு பன்னரகட்டா ரோடு, மைக்கா லே-அவுட்டை சேர்ந்தவர் 46 வயது கம்ப்யூட்டர் என்ஜினீயர். கடந்த 2012-ம் ஆண்டு இவரது மனைவி நோய்வாய்பட்டு இறந்துவிட்டார். அதில் இருந்து குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவர் தனது வேலையையும் விட்டுவிட்டார். தனது 15 வயது மகள் மற்றும் மகனுடன் மைக்கா லே-அவுட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் இரவு குடிபோதையில் இருந்த அவர் தனது வீட்டில் இருந்த எலெக்டிரிக் கீ போர்டை வாசித்து உள்ளார். அதோடு அதில் சத்தத்தை அதிகமாக வைத்து கீ போர்டு வாசித்து உள்ளார். அப்போது அவரது 15 வயது மகள் நான் படித்து கொண்டு இருக்கிறேன். அதற்கு அதிக சத்தத்தில் கீ போர்டு வாசிப்பது இடைஞ்சலாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.
மேலும் இரவு நேரத்தில் அதிக சத்தத்துடன் கீ போர்டு வாசித்தால் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கும் தொந்தரவாக இருக்கும் அவர்கள் போலீசில் புகார் செய்யக்கூடும் என்று எச்சரித்து இருக்கிறாள். இதனால் குடிபோதையில் இருந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் வீட்டின் சமையல் அறையில் இருந்து கத்தியை எடுத்து வந்து மகளை தாக்கி இருக்கிறார். இதில் மகளுக்கு கை, முதுகில் காயம் ஏற்பட்டு உள்ளது. தந்தையிடம் இருந்து தப்பிக்க போராடி இருக்கிறாள்.
இதில் எப்படியோ கத்தி கம்ப்யூட்டர் என்ஜினீயரின் மார்பில் குத்தி இருக்கிறது. அதுபற்றி தெரியாமல் தொடர்ந்து மகளை தாக்க முயற்சித்து இருக்கிறார். ஒருகட்டத்தில் தந்தையிடம் இருந்து தப்பிக்க சிறுமி அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு விட்டார். அதிகாலை 3 மணி அளவில் சிறுமியின் சகோதரன் ரத்த வெள்ளத்தில் தந்தை தரையில் கிடப்பதை பார்த்து உள்ளார். அதன்பிறகு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவமனையில் இருந்த டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதுபற்றி மைக்கா லே-அவுட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. போலீசார் உள்நோக்கம் இல்லாத கொலை வழக்கு பதிவு செய்து சிறுமியை கைது செய்து கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.