புதுடெல்லி,
யெஸ் வங்கி அதிகமான கடன்களை வழங்கியதால் வாரா கடன் பெருகியது இதனால் மூலதன நெருக்கடியில் உள்ளது. வங்கியின் வாராக்கடன் அதிகரித்ததால் அந்த வங்கியின் நிர்வாகத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் ரிசர்வ் வங்கி தன்வசப்படுத்தியது .
இதைத்தொடர்ந்து ரிசர்வ் வங்கி யெஸ் வங்கிக்கு சில காலம் கடன்கள் வழங்குவதை நிறுத்திவைக்கும்படி கட்டுப்பாடு விதித்தது. மேலும் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க வேண்டும் என்றும் மறு உத்தரவு வரும்வரை இந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. வங்கியின் நிர்வாகத்தையும் உடனடியாக மாற்றி அமைக்கவும் உத்தரவிட்டது.
யெஸ் வங்கி முன்னாள் தலைமை செயல் அதிகாரியான ராணா கபூரின் மும்பை வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த இரு நாட்களாக அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, வங்கியின் நிதிப் பரிவர்த்தனை முறைகேடு தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கின.
இந்நிலையில் அமலாக்கத் துறையினர் பண மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து தொடர்ந்து ராணா கபூரை, மும்பை அலுவலகத்திற்கு அழைத்து வந்து 15 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதையடுத்து, யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இயக்குனரகம் வழக்குப்பதிவு செய்து இன்று கைது செய்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.