திருத்துறைப்பூண்டி,
விவசாயம் செய்த பயிர்களுக்கு 2017-18-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அறுவடையாகும் தருவாயில் நீரில் மூழ்கி அழிந்த நெற்பயிர்களுக்கு மட்டுமின்றி புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிரை இழந்த விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். கணக்கெடுப்பில் விடுபட்ட தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தோட்டக்கலை பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருத்துறைப்பூண்டியில் உள்ள கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் ஜோசப், ஒன்றிய தலைவர் பாலு, ஒன்றிய செயலாளர் ஜெயபால், நகர செயலாளர் சுந்தர், நகர தலைவர் பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணைச்செயலாளர் ஞானமோகன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரராமன், விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் பாஸ்கர், கட்சி நகர செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.