செய்திகள்

வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது

கமுதி அருகே வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கமுதி,

கமுதி கோவிலாங்குளம் அருகே ஒச்சத்தேவன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சண்முகநாதன். இவருக்கும், மறவர் கரிசல்குளத்தை சேர்ந்த பழனிநாதன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு பழனிநாதன் ஒச்சத்தேவன்கோட்டை கிராமத்திற்கு வந்தபோது சண்முகநாதன் தரப்பினர் அவரை தாக்கினராம். இதனால் சண்முகநாதனை பழிவாங்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவிலாங்குளம் அருகே கொம்பூதி விலக்கு ரோட்டில் சண்முகநாதனின் தம்பி நேதாஜி (வயது 20) என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடிவிட்டது. இதில் நேதாஜி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேந்திரன் மற்றும் கோவிலாங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி கமுதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக கோவிலாங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி மற்றும் போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்

இந்தநிலையில் கொலை சம்பவம் தொடர்பாக கமுதி அருகே தொட்டியபட்டி கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் முனீஸ்வரன் (27), கூராங்கோட்டை ராமு மகன் முத்துக்கண்ணன் (22), ஆரைகுடி மாரிமுத்து மகன் வசந்தகுமார் (21), திருமால் மகன் மகேந்திரன் (21), மங்களம் கிராமத்தை சேர்ந்த ராமபாண்டியன் மகன் சேதுபதி (21) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் பழனி நாதன் உள்பட 15 பேர் மீது கோவிலாங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.