கம்பம்,
தேனி மாவட்டம் கம்பம் காட்டுப்பள்ளிவாசல் பகுதியில் இருந்து கேரள மாநிலத்துக்கு கஞ்சா கடத்தப்படுவதாக கம்பம் வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் மறித்தனர். போலீசாரை கண்டதும் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேர், வாகனங்களை நிறுத்திவிட்டு தப்பியோட முயன்றனர். இதனையடுத்து போலீசார் துரிதமாக செயல்பட்டு, தப்பியோட முயன்றவர்களை துரத்தினர். அவர்களில் 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். 2 பேர் தப்பியோடிவிட்டனர்.
பின்னர் காருக்குள் சோதனை செய்த போது, அதில் 23 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பிடிபட்ட 5 பேரையும் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு, போலீசார் அழைத்து சென்றனர். மேலும், கார், மோட்டார் சைக்கிள் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் கம்பம் குரங்குமாயன் தெருவை சேர்ந்த சிவனேஷ் என்ற சிவனேசுவரன் (வயது 28), விஜய் (21), வருசநாடு சிங்கராஜபுரத்தை சேர்ந்த பேச்சியம்மாள் (40), அமைதிகண்ணன் (26), கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்த அமரேசன் (42) என்பதும் தெரியவந்தது.
கம்பத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு கஞ்சாவை கடத்த முயன்றபோது அவர்கள் போலீசில் சிக்கியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பேச்சியம்மாள் உள்பட 5 பேரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய சிங்கராஜபுரத்தை சேர்ந்த அய்யர், உலகத்தேவர் தெருவை சேர்ந்த பாண்டீஸ்வரன் (27) ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.