பெங்களூரு: துபாயில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.61 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
துபாயில் இருந்து கடத்தல்
துபாயில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் விமான நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, துபாயில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் வந்த பயணிகளிடமும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.
அப்போது எந்த பயணிகளிடமும் தங்க நகைகள் எதுவும் கிடைக்கவில்லை, பயணிகளின் உடைமைகளிலும் தங்கம் சிக்கவில்லை. இதையடுத்து, துபாயில் இருந்து வந்த விமானத்தில் சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள இருக்கைக்கு அடியில் ஒரு பொட்டலம் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தார்கள்.
ரூ.61 லட்சம் தங்கம் பறிமுதல்
அதனை பிரித்து பார்த்த போது, அதற்குள் தங்க கட்டிகள், பேஸ்ட் போன்று தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது 599 கிராமுக்கு தங்க கட்டிகளும், 701 கிராம் பேஸ்ட் வடிவிலான தங்கமும் இருந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.61 லட்சம் இருக்கும் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த மர்மநபர்கள், போலீசாருக்கு பயந்து விமானத்திலேயே அவற்றை விட்டுவிட்டு சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
அந்த தங்கத்தை கடத்தி வந்த மர்மநபர்கள் யார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.