திருச்சி,
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் டாக்டர் வி.இளங்கோவனை ஆதரித்து கந்தர்வகோட்டை, திருவெறும்பூர், உய்யகொண்டான் மலை, திருச்சி ஆகிய பகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். திருச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
இந்திய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நடைபெறுகின்ற மிக முக்கியமான தேர்தல். அண்டை நாடுகள் இந்திய நாட்டின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல். தீவிரவாதிகள், பயங்கரவாதிகளை நாட்டிலே ஊடுருவச் செய்து நம் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த நேரத்தில் இந்திய நாட்டிற்கு வலிமையான, திறமையான, உறுதியான பிரதமர் வேண்டும். அத்தகைய ஆற்றல் உள்ள பிரதமர் தான் நரேந்திரமோடி. அவர் மீண்டும் இந்திய நாட்டின் பிரதமராக வரவேண்டும் என்பதற்காகத்தான். நாம் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கிறோம்.