சென்னை,
சென்னையில் உள்ள கை ஏந்தி பவனில் கூட்டம் அலைமோதுகிறது. டிப்டாப் உடை அணிந்தவர்களும் வரிசையில் நின்று சாப்பிடுகின்றனர்.
மத்திய அரசு கடந்த 1ந் தேதி நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. எனும் ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்தியது.
ஜி.எஸ்.டி. வரியால் ஏற்பட்டுள்ள கட்டண உயர்வு ஓட்டல்களில் அடிக்கடி சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ள உணவு பிரியர்கள் வயிற்றில் அடிப்பதாக அமைந்து இருக்கிறது.ஓட்டல்களில் கூட்டம் குறைந்ததால், சாலையோர உணவு கடைகளில் கூட்டம் நிரம்பி வழிய தொடங்கி உள்ளது.
ஓட்டல்களில் சாப்பிட்டு பழகியவர்களும் தற்போது கை ஏந்தி பவன் என்று அழைக்கப்படும் சாலையோர உணவு கடைகளை நாட தொடங்கி உள்ளனர். டிப்டாப் உடை அணிந்தவர்களும் வரிசையில் நின்று சாப்பிடுவதை காண முடிகிறது. சாலையோர உணவு கடைகளில் சாப்பிடுவதை கவுரவ குறைச்சல் என்று கருதுபவர்கள் பார்சல் வாங்கி செல்கின்றனர்.
சாலையோர உணவு கடைகளில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரிப்பதால், கூடுதலாக உணவுகளை கடைக்காரர்கள் சமைக்கின்றனர். வாடிக்கையாளர்கள் விருப்பத்துக்கு ஏற்ப விதவிதமான உணவு வகைகளையும் விற்பனை செய்ய தொடங்கி உள்ளனர்.