செய்திகள்

குடும்ப தகராறில் மைத்துனரை துப்பாக்கியால் சுட்ட வாலிபர் கைது தாராவியில் பரபரப்பு

தாராவியில் குடும்ப தகராறில் மைத்துனரை துப்பாக்கியால் சுட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை தாராவி 90 அடி சாலையை சேர்ந்தவர் ரிஸ்வான் காசிம் பட்டேல் (வயது29). இவரது வீட்டுக்கு நேற்று காலை மனைவியின் தம்பி அப்ரிடி செய்யது(20) வந்தார். அவர் அக்காவுக்கு பர்தா வாங்கி வந்திருப்பதாக கூறினார். பின்னர் அவர் திடீரென துப்பாக்கியை எடுத்து அக்கா கணவர் ரிஸ்வான் காசிம் பட்டேல் மீது சுட்டார். இதில் குண்டு அவரது தலையில் பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சயான் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இந்தநிலையில் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மைத்துனரை துப்பாக்கியால் சுட்ட அப்ரிடி செய்யதை கைது செய்து, துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், வாலிபர் குடும்ப தகராறில் மைத்துனரை துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது.

ரிஸ்வான் காசிம் பட்டேல், அப்ரிடி செய்யது சகோதரியை ஏமாற்றி 3-வது திருமணம் செய்து உள்ளார். இதனால் பெண்ணின் குடும்பத்திற்கும், ரிஸ்வான் காசிம் பட்டேல் குடும்பத்துக்கும் தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இதேபோல ரிஸ்வான் காசிம் பட்டேல் மீதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. முன்னாள் மனைவிக்கு முத்தலாக் கொடுத்த விவகாரத்திலும் அவர் மீது வழக்கு உள்ளது என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

குடும்ப தகராறில் மைத்துனரை வாலிபர் துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தால் நேற்று தாராவியில் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT