வேலூர்,
பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவற்றுடன் ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதன்படி வருகிற 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 4 நாட்கள் வழங்கப்பட இருக்கிறது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 1,820 ரேஷன் கடைகள் மூலம் 31.12.2019 முடிய நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி அட்டைதாரர்கள். காவலர் அட்டை, வனக்காவலர் அட்டை தாரர்கள் என 10 லட்சத்து 25 ஆயிரத்து 217 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது.
பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கிவைக்கிறார்கள். அதைத்தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளிலும் 9-ந் தேதி முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும்.
12-ந்தேதிக்குள் பொங்கல் பரிசு வாங்கமுடியாமல் விடுபட்டவர்களுக்கு 13-ந்தேதி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்கச்செல்லும் குடும்பஅட்டைதாரர்கள் தங்கள் ஸ்மார்ட் கார்டை கொண்டுசெல்லவேண்டும். ஸ்மார்ட் கார்டை தொலைத்துவிட்டவர்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரின் ஆதார் அட்டை அல்லது குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுடன் சென்று பெற்றுக்கொள்ளலாம்.
ரேஷன் கடைகளுக்கு 2-வது வெள்ளிக்கிழமை விடுமுறையாகும். ஆனால் வருகிற 10-ந்தேதி 2-வது வெள்ளிக்கிழமையானாலும் அன்று ரேஷன் கடைகள் செயல்படும். கூட்ட நெரிசலை தவிர்க்க ரேஷன் கடைகளில் பகுதிவாரியாக அட்டவணை தயாரிக்கப்பட்டு ஒட்டப்படும். அதன் அடிப்படையில் பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.
இதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் வட்ட வழங்கல் அலுவலர் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.