செய்திகள்

காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொன்ற தாய், சகோதரர் கைது

காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த தாய், சகோதரர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மும்பை பைதோனி, சந்த்துக்காராம் ரோட்டை சேர்ந்த பெண் பாப்பு வாங்களே(வயது40). இவரது மகள் நிர்மலா(23). இவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு பாப்பு வாங்களே கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். மேலும் காதலை கைவிடுமாறு மகளிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.

சம்பவத்தன்று நிர்மலா காதலனுடன் செல்ல வீட்டைவிட்டு வெளியேற முயன்றார். அப்போது தாயுக்கும், மகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த தாய், பெற்ற மகள் என்றும் பாராமல் நிர்மலாவை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்து சென்ற போலீசார் நிர்மலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நிர்மலாவின் தாய் பாப்பு வாங்களே மற்றும் சகோதரர் ஆகாசை கைது செய்து உள்ளனர்.

கொலை நடந்த போது ஆகாஷ் வீட்டில் இருந்துள்ளார். அவர் கொலைக்கு உடந்தையாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் ஆகாசை கைது செய்து உள்ளனர்.

SCROLL FOR NEXT