கராக்கஸ்,
வெனிசூலா நாட்டின் இடைக்கால அதிபராக தன்னை அறிவித்துக்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் குவைடோ, மக்களை ஒன்று திரட்டி அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.
இந்த நிலையில், அந்நாட்டின் ராணுவத்தில் ஒரு பிரிவினர் ஜூவான் குவைடோவுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தனர். இதனால், நேற்று முன்தினம் தலைநகர் கராக்கசில் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது.
ராணுவத்தில் ஒரு பிரிவினர், ஜூவான் குவைடோ உடன் கைகோர்த்துக் கொண்டு ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பதாக நிகோலஸ் மதுரோ பரபரப்பு குற்றம் சாட்டினார். மேலும் விசுவாசம் மற்றும் வீரமுடைய வெனிசூலா ராணுவ வீரர்கள் இதை முறியடிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
கராக்கசில் ராணுவத்தின் இரு பிரிவினர் இடையே பயங்கர சண்டை நடந்தது. இரு தரப்பினரும் மாறி, மாறி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர். கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.
இதற்கிடையில் ராணுவ வீரர்களுக்கு இடையிலான சண்டையில் பொதுமக்களும் இணைந்து கல்வீச்சு, வாகனங்களுக்கு தீவைப்பு என வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் கராக்கஸ் முழுவதும் போர்க்களமாக காட்சி அளித்தது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றிய அதிபர் நிகோலஸ் மதுரோ, சதிகாரர்களின் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.