சிக்கமகளூரு:
சிக்கமகளூரு நகரில் காந்தி பூங்கா அமைந்துள்ளது. இங்கு குழந்தைகள், சிறுவர்கள் விளையாடுவதற்கு பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகமாக உள்ளன. இதனால் சிக்கமகளூரு மற்றும் சுற்றுவட்டார மக்கள் காந்தி பூங்காவுக்கு குழந்தைகளுடன் வந்து பொழுதை கழித்து வருகிறார்கள். இங்கு சிறுவர்களுக்கான ரெயில் ஓடுகிறது. அதற்காக தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ரெயில், பூங்காவை சுற்றி வரும். காந்தி பூங்காவுக்கு வரும் குழந்தைகள், சிறுவர்கள் அந்த விளையாட்டு ரெயிலில் பயணம் செய்து குதூகலம் அடைவார்கள். காந்தி பூங்காவுக்கு வரும் சிறுவர்களுக்கு ரெயில் பயணம் மிகவும் பிடித்ததாக உள்ளது. இந்த நிலையில் அந்த ரெயில் அடிக்கடி பழுதாகி வந்தது.
இதனால், விளையாட்டு ரெயில் பயணம் அடிக்கடி நிறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது அந்த விளையாட்டு ரெயிலின் என்ஜினில் பழுது ஏற்பட்டதால், காந்தி பூங்காவில் தற்காலிகமாக விளையாட்டு ரெயில் பயணம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பூங்காவுக்கு வரும் குழந்தைகள், சிறுவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுகுறித்து காந்தி பூங்கா பராமரிப்பு மேலாளர் ஹர்ஷா கூறுகையில், விளையாட்டு ரெயிலின் என்ஜினில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் வருகிற 28-ந்தேதி வரை விளையாட்டு ரெயில் பயணம் நிறுத்தப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து புதிய என்ஜின் வரவழைக்கப்பட்டுள்ளது. அது பொருத்தப்பட்ட பின்னர், விளையாட்டு ரெயில் பயணம் தொடங்கும் என்றார்.