போபால்,
மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கலாசாரத்துறை மந்திரியாக உஷா தாக்குர் என்ற பெண்மணி பதவி வகித்து வருகிறார்.
இந்தூர் மாவட்டத்தில் அவர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட மோவ் தொகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:-
பெண்களை கற்பழிப்பவர்களை பகிரங்கமாக தூக்கிலிட வேண்டும். அவர்களது உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்தக்கூட அனுமதிக்கக்கூடாது. அந்த உடலை கழுகுகளும், காகங்களும் கொத்தி தின்னட்டும். அதை ஒவ்வொருவரும் பார்க்கும்போது, யாருக்குமே பெண்களை தொட தைரியம் வராது.
இவ்வாறு அவர் பேசினார்.
அவரது பேச்சு அடங்கிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து ஒரு செய்தி நிறுவனம் தரப்பில் கேட்டபோது, உஷா தாக்குர் கூறியதாவது:-கற்பழிப்பு குற்றவாளிகள், பகிரங்கமாக குற்றம் செய்து விட்டு, யாருக்கும் தெரியாமல் சிறையில் தண்டனை அனுபவிக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு பயமே இருப்பது இல்லை என்பதற்காகவே இந்த கோரிக்கையை விடுத்தேன்.கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கக்கோரி, பொதுமக்கள் கையெழுத்து பிரசாரம் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.