டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தற்கொலை தொடர்பாக விசாரித்துவரும் போலீசார், அவர்களின் வழிபாட்டு முறை வித்தியாசமாக இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். மூட நம்பிக்கையால் நிகழ்ந்த தற்கொலையாக இருக்கலாம் என கருதுகின்றனர். அவர்களது வீட்டில் கைப்பற்றிய சில கையேடுகளும் இதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. இறந்தவர்களின் வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் போலீசார் நேற்று தீவிரமாக சோதனை போட்டனர். அப்போது வீட்டுக்குள் இருந்து 11 குழாய்கள் வெளியே நீட்டிக்கொண்டு இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். அந்த குழாய்கள் வேறு எந்த பொருளுடனும் இணைக்கப்படவும் இல்லை.
11 பேரும் இறந்து கிடந்த அறையில் இருந்துதான் இந்த குழாய்கள் வெளியே நீண்டுகொண்டு இருந்தன. இது குறித்த விவரங்கள் அவர்கள் வைத்திருந்த குறிப்பேடுகளிலும் காணப்பட்டது. அதாவது, தாங்கள் இறந்த பின் தங்களது ஆன்மா சொர்க்கத்துக்கு போக இந்த குழாய்கள் உதவும் என குறிப்பிடப்பட்டு இருந்ததாக தெரிகிறது.
நவீன யுகத்திலும் இப்படியெல்லாம் மூட நம்பிக்கையுடன் மக்கள் இருக்க முடியுமா? என்று குழம்பும் அளவிற்கு அங்கிருந்து தகவல்கள் வெளியாகி வருகிறது.